டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Jan 2022 11:04 PM GMT (Updated: 19 Jan 2022 11:04 PM GMT)

கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் விடியா அரசு, ஆட்சி பொறுப்பேற்றது முதல் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதை, அ.தி.மு.க. சார்பில் சுட்டிக்காட்டியபோதெல்லாம் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று மழுப்பலான அறிக்கைகளை அரசு வெளியிட்டது.

ஆனால், இந்த சந்தர்ப்பவாத அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராக்கெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவுவதாக பேட்டியில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு நோய்த்தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்

2020-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 775. அந்த காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த, இன்றைய முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கொரோனா பரவுகிறது என்று ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின் உள்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது இந்த தி.மு.க. அரசின் வாக்குமூலப்படி, தினமும் சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

மதுக்கடைகளை மூடவேண்டும்

தமிழக மக்களின் உயிரை காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள இந்த விடியா தி.மு.க. அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது.

ஆகவே, இந்த விடியா தி.மு.க. அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story