பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 19 Jan 2022 11:06 PM GMT (Updated: 19 Jan 2022 11:06 PM GMT)

பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பியுஷ் கோயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையின் முக்கியத்துவத்தையும், ஜவுளித்துறையின் செயல்பாட்டை பாதிக்கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கடிதம் எழுதியிருந்தேன்.

பருத்தி மற்றும் நூல் விலை ஏற்ற இறக்கம் மற்றும் துணிகள், ஆடைகளின் விலையில் அதன் பாதகமான தாக்கம் ஆகியவை ஏற்படுத்தும் கடுமையான நிலைமையை தமிழ்நாடு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனது முந்தைய கடிதத்தில், பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கோரியிருந்தேன்.

உண்ணாவிரத போராட்டம்

அதாவது, ஊகமான வணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக, பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும்; குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்குபெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்; உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இருந்தாலும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கருதுகின்றனர். நூல் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் 21.1.2022 அன்று விசைத்தறி, ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் நூல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 17.1.2022 மற்றும் 18.1.2022 ஆகிய 2 நாட்கள் உற்பத்தியை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நிறுத்திவிட்டனர்.

தலையிடுங்கள்

2020-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதம் முதல், 2021-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் வரை நூல் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தையும், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவிடும் விலையையும் சுட்டிக்காட்டியுள்ளேன். இந்த ஒரு ஆண்டிற்குள் பருத்தி நூல் விலை ரூ.36 ஆயிரம், அதாவது 48 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தித் தொழிலகங்கள் இயங்குவது விரைவில் சாத்தியமற்றதாகிவிடும்.

இதன் விளைவாக மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை மற்றும் தொழில் துறை அமைதியின்மை ஏற்படும். இந்த ஆபத்தான நிலைமையை சீரமைக்க இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story