தமிழகம் முழுவதும் 600 மையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...!


தமிழகம் முழுவதும் 600 மையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்...!
x
தினத்தந்தி 20 Jan 2022 2:18 AM GMT (Updated: 20 Jan 2022 2:18 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 10-ந் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ‘பூஸ்டர் டோஸ்’ போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட ஏதுவாக தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ‘பூஸ்டர் டோஸ்’ போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 600 இடங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story