விடுதி அறையை சுத்தம் செய்ய சொன்னதால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 5:40 AM GMT (Updated: 20 Jan 2022 5:40 AM GMT)

இது தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதி பெண் வார்டனை போலீசார் கைது செய்தனர்


திருக்காட்டுப்பள்ளி;

தஞ்சை அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக  மாணவி தங்கியிருந்த விடுதி பெண் வார்டனை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா(வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்தார். 

இந்த நிலையில் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று விஷம் குடித்தார். இதனால் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இது குறித்து மாணவியின் தந்தை முருகானந்தம் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

போலீசாரின் விசாரணையின்போது, விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு கூறியதால் தான் மனம் உடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டதாக மாணவி கூறினார். 

இதனைத்தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

Next Story