பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருவாய் - அரசு போக்குவரத்துத்துறை தகவல்


பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருவாய் - அரசு போக்குவரத்துத்துறை தகவல்
x
தினத்தந்தி 20 Jan 2022 6:24 AM GMT (Updated: 20 Jan 2022 6:24 AM GMT)

பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் பண்டிகைக்கு முன்பும், 17, 18, 19-ந்தேதியில் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த ந்லையில், பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு மக்கள் அதிகளவு பயணம் செய்தனர். இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

11, 12, 13 ஆகிய 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். இதன்மூலம் ரூ.62 கோடி வருவாயும், 17, 18, 19-ந்தேதிகளில் 4.5 லட்சம் பேர் பயணம் செய்ததன் மூலம் ரூ.57 கோடியும் வருமானமும் கிடைத்தது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்ததன் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலும் பொங்கல் பண்டிகை பயணத்தை அதிகளவு மேற்கொண்டுள்ளனர்.

Next Story