பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால்


பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால்
x
தினத்தந்தி 20 Jan 2022 9:59 PM GMT (Updated: 20 Jan 2022 9:59 PM GMT)

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.

சென்னை,

2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுகிய காலத்தில் 21 வகையான பொருட்கள் தரமாக வழங்கவேண்டும் என்பதற்காக உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டு குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. 27.12.2021 அன்று கூட்டுறவுத்துறை அமைச்சரும், நானும், காணொலி வாயிலாக மாவட்ட கலெக்டர்கள், மண்டல இணை பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி அனைவருக்கும் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

முதல்-அமைச்சர் சென்னையில் பொதுவினியோகத்திட்ட அங்காடிகளுக்கு சென்று பொருட்களின் தரத்தையும், வினியோகத்தையும் ஆய்வு செய்தார். சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றி கொடுத்ததோடு அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தவறுக்கு இடம் கொடுக்காமல் வெளிப்படையாகவும், தவறு செய்தால் உரிய நடவடிக்கையும் எடுக்கும் ஆட்சிதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு.

ரூ.74 கோடி மீதம்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு 20 கிராம் முந்திரிப்பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருட்களுக்கு வழங்கிய தொகை ரூ.45. ஆனால் இந்த பொங்கலுக்கு எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் பொருட்களுக்கு வழங்கிய தொகை ரூ.62. இந்த 3 பொருட்களில் மட்டுமே ஒரு தொகுப்புக்கு ரூ.48 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இவர்கள் ஆட்சியில் இந்த 3 பொருட்கள் கொள்முதலில் மட்டும் இவ்வளவு அதிகமாக ஏன் செலவழித்தார்கள்? என்பதற்கு பதில் கூறாமல் வசைபாடியுள்ளார்.

கடந்த ஆட்சியின் இறுதியில் பருப்புக்கு கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் 50 காசு என்ற விலையில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்துவிட்டு, நாங்கள் கிலோ ரூ.78 முதல் ரூ.86 வரையிலான விலையில் இறுதிசெய்து பருப்பு கொள்முதல் செய்தோம். தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளி கோருவது எளிமையாக்கப்பட்டு பலரும் கலந்துகொண்டு, அவர்கள் கொடுத்த விலைப்புள்ளியில் குறைந்தவற்றிற்கு கொள்முதல் ஆணை வழங்கப்படும் வெளிப்படையான நடைமுறை கொண்டுவரப்பட்டதால், இதில் மட்டும் ஒரு மாதத்துக்கே ஒரு கொள்முதலில் ரூ.74 கோடியே 75 லட்சம் எங்கள் அரசால் மீதப்படுத்தப்பட்டிருக்கிறது.

விவாதிக்க தயாரா?

மேற்குறிப்பிட்ட 2 கொள்முதல்களில் மட்டும் 2 மாதத்திற்கே ஒரு துறையில் மட்டுமே இவ்வளவு பணத்தை நாங்கள் மீதப்படுத்தியிருக்கிறோம் என்றால், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த 51 மாத காலத்தில் எல்லாத்துறைகளிலும் சேர்த்து எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்?.

ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்துவிட்டு, அபாண்டமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்க தயாராக உள்ளாரா? இல்லாவிடில் அவர் தனது தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story