தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2022 11:17 PM GMT (Updated: 20 Jan 2022 11:17 PM GMT)

நல்லாட்சியின் அடையாளத்தை 6 மாதத்திலே பெற்றிருக்கிறோம் என்றும் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக, தர்மபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்திருக்கிறாயா என்று கேட்டால், பட்டியல் போடும் போது நிச்சயம் இடம் பெறும் மகத்தான திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும்.

சேலம்- தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும். தர்மபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம், புதிய சிப்காட் தொழில் பூங்கா, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.

முதலீடுகள் ஈர்ப்பு

இன்றைய தினம் மட்டும் 249 கோடியே 5 லட்சத்து, 11 ஆயிரத்து, 552 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. தி.மு.க. அரசு என்பது எப்போதும் இதே சுறுசுறுப்புடன் தான் செயல்படும். மே மாதம் இந்த அரசு பொறுப்பேற்றது. இந்த 6 மாத காலத்தில் 304 திட்டங்களுக்காக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து, 902 கோடி ரூபாய் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் நடப்பது நல்லாட்சி என்பதற்கான உதாரணம்.

ஒரு மாநிலத்தில் ஏராளமான முதலீடுகள் பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது என்றால் அந்த மாநிலத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பொருள். அந்த மாநிலம் வளர்ச்சிக்குரிய மாநிலமாக இருக்கிறது என்று பொருள். அந்த மாநிலத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கினால் அந்த நிறுவனம் வளரும் என்று பொருள்.

நல்லாட்சியின் அடையாளம்

அத்தகைய மரியாதையை, பெருமையை தி.மு.க. அரசு பெற்றிருக்கக்கூடிய காரணத்தால் தான், இத்தனை நிறுவனங்கள், இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளார்கள். முதலீடு என்பது வெறும் தொழில் சார்ந்தது மட்டுமல்ல, அது வளர்ச்சியை சார்ந்தது. அது நல்லாட்சியின் அடையாளம் ஆகும். அத்தகைய பெயரை ஆட்சிக்கு வந்த 6 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம், அதுதான் முக்கியமானது. இரண்டு ஆண்டுகள் கழித்தோ, நான்கு ஆண்டுகள் கழித்தோ பெயர் வாங்குவதை விட 6 மாத காலத்தில் பெயர் வாங்குவது தான் மிகமிக முக்கியமானது.

இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை பிறக்கிறது. நமது தாய் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக நாம் ஆக்குவோம். ஆக்க முடியும், அதுவும் விரைவில் ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர். காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில்குமார் எம்.பி., ஜி.கே. மணி எம்.எல்.ஏ. தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story