ஐ.ஏ.எஸ். பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


ஐ.ஏ.எஸ். பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jan 2022 12:19 AM GMT (Updated: 24 Jan 2022 12:19 AM GMT)

ஐ.ஏ.எஸ். பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சி பணி விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களின் கருத்தை மத்திய அரசு கேட்டுள்ளது.

கடிதம்

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடுமையான எதிர்ப்பு

சமீபத்தில் மத்திய அரசு அகில இந்திய ஆட்சி பணி விதிகள் 1954-ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் வசம் அதிகார குவிப்புக்கு வழிவகுக்கும். மேலும், ஆட்சி பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பது குறித்த மத்திய அரசின் தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்கனவே மாநில அரசுகளில் குறிப்பிட்ட சில முதுநிலைகளில் போதுமான எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாத சூழ்நிலை நிலவிவருகிறது.

தொய்வுநிலை

மத்திய குரூப்-1 நிலை அலுவலர்கள் மூலமாகவும், வெளிச்சந்தையில் இருந்து வல்லுனர்களை தேர்வு செய்யும் முறை மூலமாகவும் மத்திய அரசு தனது தேவையை நிறைவு செய்து கொள்ளும் சூழ்நிலையில், மாநில அரசு முழுக்க முழுக்க தன்னுடைய நிர்வாக தேவைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள இந்திய ஆட்சி பணி அலுவலர்களை சார்ந்துள்ளது.

மக்களுக்கு தேவையான பல்வேறு மத்திய, மாநில அரசின் திட்டங்களை மாநில அரசுகளே முன்னின்று செயல்படுத்தி வருகிறது. தேசிய பேரிடர்களை எதிர்கொள்ளும் சமயங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் மாநில அரசுகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வற்புறுத்துவது, ஏற்கனவே போதுமான எண்ணிக்கை குறைபாடுள்ள நிலையில், நிர்வாகத்தில் ஒரு தொய்வுநிலையை ஏற்படுத்திவிடும். மேலும், மத்திய அரசு வெளிச்சந்தையில் இருந்து வல்லுனர்களை தேர்வு செய்திடும் முறை மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்பும் அலுவலர்களின் ஆர்வத்தையும் ஏற்கனவே குறைத்துள்ளது.

இணக்கமான உறவு

இந்த புதிய சட்ட திருத்தமானது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமான அகில இந்திய ஆட்சி பணி என்பதனை சேதமடைய செய்துவிடும். இந்திய ஆட்சி பணி இதுவரை தேசத்திற்கு சிறப்பான சேவையாற்றி மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளின் மூலம் ஒரு வலுவான கட்டமைப்பாக திகழ்கிறது.

உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் விருப்பம் மற்றும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் பணிக்கு மாற்றமுடியும் எனும் நிலை இந்தியாவின் இரும்பு கட்டமைப்பு என்று அழைக்கப்படும் அரசு பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையையும், அலுவலர்களிடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும்.

நாட்டிற்கு உகந்ததல்ல

இதனை செயல்படுத்தினால் அகில இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சிப்பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்ததல்ல.

குடிமைப்பணி அலுவலர்கள் அரசியல் சார்புத்தன்மை இன்றியும், எவ்வித அச்ச உணர்வின்றியும் பணியாற்ற வேண்டும். ஆனால், உத்தேசிக்கப்பட்ட சட்ட திருத்தங்கள் நிர்வாக கட்டமைப்பின் தன்மையையும், அதன் பணியாற்றும் செயல்திறனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிர்வகிப்பதும் சிக்கலாக்கிவிடும். இவற்றினால் மாநில நிர்வாகமும், அதன் மூலம் தேச நலனும் கூட பாதிக்கப்படக்கூடும்.

கூட்டாட்சி அரசியல் அமைப்பு

புதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் அவசரமாக சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர முயற்சிப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகவும் எதிரானதாகும்.

இந்த திருத்தத்திற்கு தொடர்புடைய 2 அமைப்புகளான மாநில அரசுகளும், நிர்வாக கட்டமைப்பும் இதனை வரவேற்கவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள ஒரு ஏற்பாட்டினை மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு எடுத்துக்கொள்வதும் கூட்டாட்சி அரசியல் அமைப்பிற்கு உகந்ததல்ல.

தொலைநோக்கு சிந்தனை

இது கடந்த 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட இந்த தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்க செய்யும். எதனையும் அழிப்பது எளிது, ஆனால் மறுகட்டமைப்பு செய்வது கடினமானது. இவ்வாறான கட்டுப்படுத்தக்கூடிய புதிய விதிமுறைகளை வகுப்பதற்கு பதிலாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு, மத்திய அரசு நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அகில இந்திய ஆட்சி பணியாளர்களின் பணி அமைப்பினை மேம்படுத்தவும், அவர்கள் பணியாற்றுவதற்கு சாதகமான சூழலையும் உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு பணிகளுக்கு அவர்கள் தாங்களாகவே எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் சென்று பணியாற்றக்கூடிய நிலையினை உருவாக்கலாம்.

தாங்கள் இதுகுறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நம்மால் கணிக்க இயலாத விளைவுகளை இது நிச்சயம் ஏற்படுத்தும் என கருதுகிறேன். மேலும், சுதந்திரமான சிந்தனை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் சேவையாற்றும் ஒரு இரும்பு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க விரும்பிய சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்கு சிந்தனையை நாம் நினைவுகூர வேண்டும்.

கலந்தாலோசனை

மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சி பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடவேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து நமது முன்னோர்கள் அளித்துள்ள உயரிய சிந்தனையான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தேசத்தை முன்னெடுத்து செல்ல, மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story