வேலூர்: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...!


வேலூர்: தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...!
x
தினத்தந்தி 24 Jan 2022 3:24 AM GMT (Updated: 24 Jan 2022 3:24 AM GMT)

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மன் ஹல்லி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் அணிமேஷன் கோர்ஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில், அப்துல் தனது நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று பல்வேறு இடங்களில் குறும்படம் எடுத்துவிட்டு நேற்று வேலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

வேலூரின் ஆம்பூர் அண்ணா நகர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்கம் உள்ள எஞ்சினில் இருந்து புகை வந்தது.

இதைக்கண்ட டிரைவர் உடனடியா காரை நிறுத்தியுள்ளார். இதையடுத்து, கார் டிரைவர், அப்துல் அவரது நண்பர்கள் என அனைவரும் காரில் இருந்து உடனடியாக கிழே இறங்கியுள்ளனர். காரில் இருந்த கேமரா, கணினி பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுக்க அப்துல் முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால், காரில் இருந்த கணினி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி காரில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story