தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 10:24 AM GMT (Updated: 24 Jan 2022 10:24 AM GMT)

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

'தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, தயவு கூர்ந்து தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்தும், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன' என்று கூறினார்.

மேலும், அவர் 'தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும். அது தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து என்ன ஆலோசனை வருகிறதோ அதைப் பின்பற்றி செயல்படுவோம். வரும் மே மாதத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும்' என்றும் கூறியுள்ளார்.

Next Story