இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 25 Jan 2022 1:13 PM GMT (Updated: 25 Jan 2022 1:13 PM GMT)

இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 

அதில் அவர் கூறியதாவது:-

மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளது. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது. அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது.

தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல. இந்தி உள்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். மாணவர்கள் போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1967ல் தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா.

இந்தி திணிப்பு போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுத்தனர். கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கைதானவர்கள் 6 மாதம் வரை சிறை தண்டனை பெற்றனர். இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் 

வ.உ.சிதம்பரனாரை கப்பலோட்டிய தொழிலதிபர்தானே என்று டெல்லி அதிகாரி கேட்டுள்ளார். அவர் யாருக்கு எதிராக கப்பல் ஓட்டினார். இந்த புரிதல் கூட இல்லாதவர்கள், தமிழ்நாட்டை, தமிழ் உணர்வை எப்படி புரிந்துகொள்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story