தமிழகத்தில் 33 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது: 30 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் 33 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது: 30 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jan 2022 11:27 PM GMT (Updated: 25 Jan 2022 11:27 PM GMT)

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது. 30 ஆயிரத்து 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,468 ஆண்கள், 12,587 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 55 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேரும், செங்கல்பட்டில் 1,737 பேரும், கோவையில் 3,763 பேரும், கன்னியாகுமரியில் 1,217 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் நேற்று முன்தினத்தை விட தமிழகத்தில் நேற்று 33 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 1,012 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,918 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 19 ஆயிரத்து 639 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 63 ஆயிரத்து 294 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 88 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 842 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,133 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

48 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 26 பேரும் என 48 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரையில் தலா 4 பேரும், சேலம், கோவையில் தலா 2 பேரும், விருதுநகர், திருச்சி, தேனி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கரூர், கன்னியாகுமரி, கடலூரில் தலா ஒருவரும் என 17 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 312 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 25 ஆயிரத்து 221 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 391 பேரும், செங்கல்பட்டில் 1,737 பேரும், கோவையில் 2 ஆயிரத்து 384 பேரும் அடங்குவர். இதுவரையில் 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story