இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்துங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்துங்கள் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 25 Jan 2022 11:50 PM GMT (Updated: 25 Jan 2022 11:50 PM GMT)

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை அந்நாட்டின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை வருகிற 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்துள்ள செய்தி கவலையையும், வேதனையையும் அளிக்கிறது.

இந்திய-இலங்கை கூட்டு பணிக்குழுவானது மீன்பிடித்தல் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கும் சூழ்நிலையில், இந்த ஏலம் விடுவதற்கான அறிவிப்பு துரதிருஷ்டவசமானது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முன்வந்துள்ள தமிழக மீனவர்கள் மத்தியில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

தொழில்நுட்ப குழு

இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள மீட்க இயலாத 125 தமிழக மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் வழிமுறைகளை இறுதி செய்வதற்கு ஒரு தொழில்நுட்பக்குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்து அப்புறப்படுத்துவதை மேற்பார்வையிடவும், விற்பனை வருவாயை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும், தமிழகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அவர்களின் இலங்கை பயண விவரங்களையும் மத்திய வெளியுறவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகைய சாதகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை, இலங்கையின் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப்படகுகளை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளதாக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

கண்டனம்

இலங்கை அரசு முறையாக கலந்தாலோசனை மேற்கொள்ளாமல் ஏலத்தை நடத்த அவசரம் காட்டுவது, வாழ்வாதாரத்தை இழந்த தமிழக ஏழை மீனவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்திய தூதரகமும், தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாதிக்கும்.

மேலும், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளால் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றியே விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் படகுகளை, எவ்வித சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத இலங்கை அரசின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை ஏலம்விட உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை திரும்பப்பெறவும், இந்திய அரசின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கொண்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசின் மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

மத்திய அரசு தலையிட வேண்டும்

இந்த சூழ்நிலையில், 2018-ம் ஆண்டுக்கு முன் கைப்பற்றப்பட்ட மற்றும் பழுது பார்க்க இயலாதென கருதப்படும் 125 தமிழக படகுகளை ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் 2018-ம் ஆண்டுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட 75 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முன்கூட்டியே விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story