தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்.19-ந்தேதி ஒரே கட்ட வாக்குப்பதிவு


தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்.19-ந்தேதி ஒரே கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 Jan 2022 11:46 PM GMT (Updated: 26 Jan 2022 11:46 PM GMT)

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி களுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 24 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

அதனைத்தொடர்ந்து எஞ்சிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையான இடங்களை ஆளும் தி.மு.க.வே கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. எப்போது வேண்டும் என்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த 24-ந் தேதி விசாரித்த நீதிபதிகள், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்தலாம்’ என்று உத்தரவிட்டனர்.

தேர்தல் அட்டவணை வெளியீடு

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது உறுதியானது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டவாறு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

வார்டு மறுவரையறை செய்யப்பட்ட அறிவிப்பை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடி பட்டியல்கள் 9.11.21 மற்றும் 4.1.22 அன்றும், வாக்காளர் பட்டியல்கள் 9.12.21 மற்றும் 10.1.22 அன்றும் வெளியிடப்பட்டன.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை

அதனைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வருகிற 28-ந் தேதி வெளியிடும். வேட்புமனு தாக்கல் 28-ந் தேதியன்றே (நாளை) தொடங்கும். வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தரப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். கொரோனா தொடர்பான நிலையான செயல்முறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் அட்டவணை விவரம் வருமாறு:-

பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல்

வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜனவரி 28-ந் தேதி. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் - பிப்ரவரி 4-ந் தேதி. வேட்புமனுக்கள் ஆய்வு செய்தல் - பிப்ரவரி 5-ந் தேதி. வேட்புமனு திரும்ப பெறுதல் - பிப்ரவரி 7-ந் தேதி. வாக்குப்பதிவு - பிப்ரவரி 19-ந் தேதி. வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி 22-ந் தேதி. தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் - பிப்ரவரி 24-ந் தேதி. தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நாள் - மார்ச் 2-ந் தேதி. மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் - மார்ச் 4-ந் தேதி.

வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், திரும்பப்பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்திட இந்த ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவற்றுடன் உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 10.12.21 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தற்போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

31,029 வாக்குச்சாவடிகள்

தேர்தல் நடைபெற உள்ள மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிகளில் 8,454 வாக்குசாவடிகளும் என மொத்தம் 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி மற்றும் துணை ஆட்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல், தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து ஆன்லைன் முறையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது.

இந்த தேர்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளர்களும், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர்கள் விவரம்

இதில் மாநகராட்சிகளில் 76 லட்சத்து 39 ஆயிரத்து 538 ஆண்களும், 78 லட்சத்து 42 ஆயிரத்து 109 பெண்களும், 2,960 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

நகராட்சிகளில் 31 லட்சத்து 51 ஆயிரத்து 528 ஆண்களும், 33 லட்சத்து 40 ஆயிரத்து 346 பெண்களும், 861 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 64 லட்சத்து 92 ஆயிரத்து 735 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பேரூராட்சிகளில் 29 லட்சத்து 15 ஆயிரத்து 727 ஆண்களும், 30 லட்சத்து 63 ஆயிரத்து 182 பெண்களும், 503 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 59 லட்சத்து 79 ஆயிரத்து 412 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண்களும், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண்களும், 1,576 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார்

இத்தேர்தலுக்கு என 649 தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அதிகாரிகள் வீதம் சுமார் 1.33 லட்சம் அதிகாரிகள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தால் சுமார் 55,337 கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்), 1,06,121 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வேட்பாளர்களின் கல்வித்தகுதி, சொத்து விவரம் மற்றும் குற்றவியல் குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் உறுதிமொழி ஆவணம் (அபிடவிட்) வேட்பாளர்களால் படிவம் 3ஏ-ல் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால்...

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாகவும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பாகவும், வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தும்போது அந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் என்பதற்கு ஆதாரமாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு திரும்பப்பெறும் நாளில் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக மட்டுமே கருதப்படுவார். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story