தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா? இலங்கை அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா? இலங்கை அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 27 Jan 2022 9:51 PM GMT (Updated: 27 Jan 2022 9:51 PM GMT)

தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விடுவதாக அறிவிப்பதா? என்று இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்களிடம் இருந்து பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை தமிழக மீனவர்களுக்குத் திருப்பித் தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, அந்த படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக அறிவித்திருப்பது கைப்பற்றப்பட்ட படகுகள் திருப்பிக் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் மொத்தம் 105 படகுகள் ஏலத்துக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் ‘பழுதுற்ற பொருள்’ என்பதன் அடிப்படையில் அடிமாட்டு விலைக்கு ஏலத்துக்கு விடப்பட இருக்கின்றன. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இயற்கை நியதிக்கு எதிரான செயல். மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்த உரிமையும் இல்லை, சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை.

உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசும் இலங்கை அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து அவற்றை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வந்தது. இந்த நிலையில், இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல உள்ளது. இலங்கை அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பது போலவும், படகுகள் திரும்பிக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் நம்பிக்கையை குலைப்பது போலவும் அமைந்துள்ளது. இந்த ஏல அறிவிப்பு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவைகள் அனைத்தும் உரியவர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். நல்ல நிலையில் இல்லாத படகுகள் சரி செய்யப்பட்ட பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை அரசின் செயலை மத்திய அரசு தடுக்காவிட்டால் பிப்ரவரி 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ராமேசுவரம் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக கடிதம் எழுதியுள்ளார் என்றாலும், ஏலத்துக்கு இன்னும் பதினைந்து நாட்கள் கூட இல்லாத நிலையில், மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, படகுகள் ஏலம் குறித்த விளம்பரம் இலங்கை அரசால் ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்படவும், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story