53 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா


53 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jan 2022 11:07 PM GMT (Updated: 27 Jan 2022 11:07 PM GMT)

தமிழகத்தில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 28 ஆயிரத்து 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 37 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16,089 ஆண்கள், 12,426 பெண்கள் என மொத்தம் 28 ஆயிரத்து 515 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,591 பேரும், செங்கல்பட்டில் 1,696 பேரும், கோவையில் 3,629 பேரும், ஈரோட்டில் 1,314 பேரும், கன்னியாகுமரியில் 970 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 984 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 ஆயிரத்து 628 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 52 ஆயிரத்து 751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 495 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 444 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,120 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

53 பேர் உயிரிழப்பு

196 நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில் 50-ஐ கடந்துள்ளது. அந்தவகையில் அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 31 பேரும் என 53 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 13 பேரும், கோவையில் 7 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தஞ்சாவூர், மதுரையில் தலா 3 பேரும் உள்பட 22 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்த 53 பேரில் 52 பேர் இணை நோயாளிகள் ஆவர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 412 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 28 ஆயிரத்து 620 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story