மகள் காதலனுடன் ஓடிச்சென்று திருமணம் செய்ததால் அவமானம் தாங்காமல் கொத்தனார் தற்கொலை


மகள் காதலனுடன் ஓடிச்சென்று திருமணம் செய்ததால் அவமானம் தாங்காமல் கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2022 10:17 PM GMT (Updated: 28 Jan 2022 10:17 PM GMT)

காதலனுடன் மகள் ஓடிச்சென்று திருமணம் செய்ததால் அவமானத்தில் மனமுடைந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 47). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சீதா(40) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-டூ படித்து வரும் இவரது இளைய மகள் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றநிலையில், வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் ராஜமங்கலம் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இந்த நிலையில் போலீசார் விசாரணையில், மாயமான மாணவி வில்லிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவரான குமார் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே காதலன் குமாருடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை தந்தை அய்யப்பன் செல்போனுக்கு மாணவி அனுப்பியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து, மகள் காதலுடன் ஓடி சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் மனவேதனை அடைந்த அய்யப்பன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சீதா உடனடியாக ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல், சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் அபிராமி (27). இவருக்கு கடந்த 23-ந் தேதி ஏ.சி மெக்கானிக்கான சதீஷ் (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று அபிராமி தனது உறவினர் வீட்டு விருந்துக்கு வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story