26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது


26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 28 Jan 2022 11:15 PM GMT (Updated: 28 Jan 2022 11:15 PM GMT)

தமிழகத்தில் 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,579 ஆண்கள், 10,954 பெண்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 533 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 5,246 பேரும், செங்கல்பட்டில் 1,662 பேரும், கோவையில் 3,448 பேரும், திருப்பூரில் 1,779 பேரும், சேலத்தில் 1,387 பேரும், ஈரோட்டில் 1,261 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 62 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றுமுன்தினத்தை காட்டிலும், நேற்று நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் 12 வயதுக்குட்பட்ட 775 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4 ஆயிரத்து 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரத்து 961 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 32 லட்சத்து 79 ஆயிரத்து 284 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 22 ஆயிரத்து 431 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 77 ஆயிரத்து 39 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 162 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 308 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,104 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

48 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 24 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 24 பேரும் என 48 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டில் 10 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், ஈரோடு, வேலூர், திருச்சியில் தலா 2 பேரும் உள்பட 13 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்த 48 பேரில் 46 பேர் இணை நோயாளிகள் ஆவர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 460 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 28 ஆயிரத்து 156 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 245 பேரும், செங்கல்பட்டில் 2,073 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 472 பேரும் அடங்குவர். இதுவரையில் 30 லட்சத்து 29 ஆயிரத்து 961 பேர் குணம் அடைந்து உள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரத்து 863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story