மகனை அடித்துக்கொன்று வைகை ஆற்றில் எரித்த பெற்றோர் கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது


மகனை அடித்துக்கொன்று வைகை ஆற்றில் எரித்த பெற்றோர் கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது
x
தினத்தந்தி 29 Jan 2022 12:11 AM GMT (Updated: 29 Jan 2022 12:11 AM GMT)

மதுபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்துக்கொன்று, உடலை மூட்டையில் கட்டி சைக்கிளில் வைத்து வைகை ஆற்றுக்கு கொண்டு வந்து எரித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடு்த்தது.

மதுரை,

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிடந்த உடலை பார்த்த போது அதில் கை, கால் தவிர மற்ற பாகங்கள் எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை கொன்று எரித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்

மேலும் போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்த போது, ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோர சாலையில் ஆங்காங்கே ரத்தம் சொட்டி உறைந்த நிலையில் கிடப்பதை கண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் ஒரு முதியவரும், மூதாட்டியும் சைக்கிளின் பின்னால் ஒரு மூட்டையை கட்டி ைசக்கிளை உருட்டி வந்தது பதிவாகி இருந்தது. பின்னர் அவர்கள் அந்த மூட்டையை வைகை ஆற்றுக்குள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அதை வைத்து போலீசார் ஆரப்பாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆரப்பாளையத்தை சேர்ந்த பழ வியாபாரி முருகேசன் (வயது 72) மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (65) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்,

அப்போது அவர்கள் போலீசாரிடம் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எரிக்கப்பட்டது அவர்களது மகன் மணிமாறன் (45) என்பதும், அவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மணிமாறனுக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றநிலையில், மணிமாறன் பெற்றோருடன் இருந்துள்ளார்.

கட்டையால் அடித்துக் கொலை

மதுவுக்கு அடிமையான மணிமாறன் அடிக்கடி மது போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். அதே போன்று நேற்று முன்தினம் இரவிலும் தாயார் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்துள்ளார். அதை பார்த்த முருகேசன் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மணிமாறன் அவர்கள் இருவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் அருகே இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார். அதில் மயங்கி விழுந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பெற்ற மகனை கொலை செய்து விட்டோமே என்று இருவரும் பதற்றத்தில் இருந்துள்ளனர். எனவே யாருக்கும் தெரிவிக்காமல் அங்கிருந்து உடலை எடுத்துச் சென்று எரிக்க திட்டமிட்டனர்.

உடலை எரித்தனர்

அதன்படி மணிமாறன் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதனை சைக்கிளின் பின்புறம் வைத்து நள்ளிரவு 2 மணி அளவில் ஆரப்பாளையம் வைகை ஆற்றுக்குள் இருவரும் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மகனை கொலை செய்த முருகேசன், கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.

Next Story