தமிழ்நாடு தொடர்ந்து தலைசிறந்த செஸ் வீரர்களை உருவாக்கி வருகிறது : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்


தமிழ்நாடு தொடர்ந்து தலைசிறந்த செஸ் வீரர்களை உருவாக்கி வருகிறது : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 March 2022 5:38 PM GMT (Updated: 16 March 2022 5:38 PM GMT)

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி  சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த  செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்க  உள்ளனர்.தமிழகத்தில் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தொடர்பாக  முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் அதில் அவர் கூறியதாவது ;

நான் இப்போது தமிழ்நாடு உலக அரங்கில் ஒரு மைல்கல்லாய் நிலைத்திருக்கப் போகின்ற ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  அந்தச் செய்தி என்னவென்றால், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்ற வாய்ப்பை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம். 

 செஸ் விளையாட்டுப் போட்டி என்றால், விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், பார்க்கின்றவர்கள் படபடப்போடும் பங்கேற்கும் ஒரு அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான செஸ் விளையாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும்  நிறைய தொடர்பு இருக்கிறது. 

உலகில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இன்றைக்கு பிரக்யானந்தா வரையில் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது தமிழ்நாடு. 

 சுமார் 150-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்குபெற இருக்கும் செஸ் விளையாட்டுப் போட்டி, இதுவரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்துவித பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் மிகப் பெரியதாக அமைய உள்ளது

விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களுடைய பெருமையை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வாக இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக நடத்துவோம். உலக விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார் 

Next Story