செப்டம்பர் முதல் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலையில் சோதனை ஓட்டம்


செப்டம்பர் முதல் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலையில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 28 March 2022 10:14 PM GMT (Updated: 28 March 2022 10:14 PM GMT)

வடசென்னை அனல்மின்சார நிலையத்தின் 3-வது நிலையில் 800 மெகாவாட் உற்பத்தி நிலையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் சோதனை ஓட்டம் தொடங்குகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மின்சார வாரியத்தில் கடந்த 6 மாதமாக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வங்கி கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி குறைப்பு, செலவினங்கள் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையால் ரூ.2 ஆயிரத்து 200 கோடி தற்போது சேமிக்கப்பட்டு உள்ளது.

மின்சார உற்பத்தி அதிகரிப்பு

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த, விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தில் தற்போது வரை 98 ஆயிரத்து 157 இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. வரவிருக்கும் 2 நாட்களில் மீதம் உள்ள 1,843 இணைப்புகளும் வழங்கப்பட்டுவிடும். அதேபோல், 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் மாற்றும் திட்டத்தில் நூறு சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன. கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் அனல்மின்சார நிலையங்கள் மூலம் 15 ஆயிரத்து 544 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நடப்பாண்டு 20 ஆயிரத்து 114 மில்லியன் யூனிட் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று புனல் மின்சார நிலையங்களிலும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

உச்சபட்சமாக 17 ஆயிரம் மெகாவாட்

அனல்மின் நிலையங்களுக்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு சுரங்கங்களில் இருந்து 50 ஆயிரம் டன் மட்டுமே வழங்கப்படுகிறது. தட்டுப்பாடு இருப்பதால் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. நிலக்கரி விலை குறைவாக கிடைக்கும் இடங்களில் இருந்து வாங்கப்படும்.

மின்சார தேவையை கருத்தில் கொண்டு 400 மெகாவாட் மின்சாரம் பெறவும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) முதல் முறையாக உச்சபட்சமாக 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. அதனை முழுமையாக பூர்த்தி செய்து உள்ளோம். கோடையில் மின்சார தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வடசென்னையில் டிசம்பரில் உற்பத்தி

தமிழகத்தில் 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடசென்னை அனல் மின்நிலையம் 3-வது நிலை தொடங்கப்பட்டது. இது கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வருகிற செப்டம்பா் மாதம் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம் உற்பத்தி தொடங்குகிறது. இங்கு வெளியாட்களை பணி நியமிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதேபோல் இங்கு சாம்பல் புகையிலிருந்து பணியாளர்களை காப்பதற்காகவே திரை (ஸ்கிரீன்) அமைக்கப்படுகிறது.

உதவி பொறியாளர்கள் தேர்வு

பொதுமக்களின் மின்சார புகார்களை தெரிவிக்க அமைக்கப்பட்ட மின்னகத்திற்கு 7.11 லட்சம் புகார்கள் வந்தது. அதில் 99 சதவீதம் அதாவது 7.06 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. முகநூல், டுவிட்டரில் புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு மின்சார இணைப்பு எண் மற்றும் செல்போன் எண்களை தெரிவித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும். வாரியத்தில் காலியாக உள்ள உதவி-பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story