தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ஏன்? அமைச்சர் கே.என். நேரு விளக்கம்


தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ஏன்? அமைச்சர் கே.என். நேரு விளக்கம்
x
தினத்தந்தி 2 April 2022 8:35 AM GMT (Updated: 2 April 2022 8:35 AM GMT)

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வுக்கான காரணங்களை அமைச்சர் கே.என். நேரு டெல்லியில் விளக்கியுள்ளார்.







சென்னை,



தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு நேற்று அறிவித்து உள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022௨023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021௨022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 

1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது.

தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022௨3-ம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

இந்நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டத்தற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளும் தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. 

இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறும்போது, உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021௨022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற காரணங்களை பரிசீலித்து சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் குறைந்துள்ளது.  செலவினம் அதிகரித்து உள்ளது.

சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது.  மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம்.  ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

புதிய மேம்பாலங்கள், நவீன பள்ளி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை கட்டுவதற்கும், அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுடைய சொந்த வருவாயை ஏற்படுத்த வேண்டிய தேவை எற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.






Next Story