‘நீட்' விலக்கு பெறுவது சாத்தியமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்


‘நீட் விலக்கு பெறுவது சாத்தியமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2022 7:04 PM GMT (Updated: 7 April 2022 7:04 PM GMT)

‘நீட்' விலக்கு பெறுவது சாத்தியமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய ‘டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி 8-ந்தேதி நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 2 மாதங்கள் நிறைவடைகின்றன. ஆனால், இன்னும் தமிழக கவர்னரின் ஒப்புதலை பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

2022-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப்பதிவும் தொடங்கிவிட்டது. அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா?, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை என்பதைவிட இது மிகவும் மோசமான நிலையாகும். 12-ம் வகுப்புத்தேர்வா... நீட் தேர்வா... எதில் கவனம் செலுத்துவது என்ற மனஉளைச்சல் மாணவர்களை வாட்டும். அது எந்த தேர்விலும் கவனம் செலுத்தவிடாமல் செய்துவிடக்கூடும்.

இந்த குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது கிராமப்புற ஏழை மாணவர்கள்தான். நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்தவேண்டும். மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும் மாணவர் நலன்கருதி தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story