திரைப்படங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் : திரைத்துறையினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்


திரைப்படங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் : திரைத்துறையினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 April 2022 11:53 PM GMT (Updated: 9 April 2022 11:53 PM GMT)

குட்கா, கஞ்சா போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் என்று சென்னையில் நடந்த மாநாட்டில் திரைப்படத்துறையினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு

இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் தக்‌ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகியிருக்கிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி வந்தால் ஒரு ஆண்டு முடிவடைய இருக்கிறது. தொழில்துறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில், வெளிநாடுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு நான் சென்று விட்டு வந்தேன். அதைத்தொடர்ந்து மாநிலத்தின் உரிமைகளை, உரிமையோடு கேட்க வேண்டும் என்ற அடிப்படையிலே 3 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றுவிட்டு வந்தேன். அதேபோல், முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில் கலைத்துறையின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி என்பது எனக்கு பெருமையாக அமைந்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டு காலம், கொரோனா காலமாக இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்தநிலையில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதில், திரையுலகமும் முக்கியமாக விளங்கிக்கொண்டிருந்தது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக அனைத்து தொழில்களும் மீண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்தவகையில் திரையுலகமும் மீண்டு வருவது மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. திரையுலகம் பழைய நிலைமைக்கு திரும்புவது மட்டுமல்ல, முன்னிலும் வேகமாக செயல்படுவதற்காகத்தான் இந்த மாநாடு. அதற்கு இந்த மாநாடு வழிவகை செய்யும் என்று நம்புகிறேன். தென்னிந்தியாவில் இந்த மாநாடு மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடக்கின்றது. சென்னையை தேர்ந்தெடுத்து இந்த மாநாட்டை நடத்துவதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சிந்தனைக்கு தீனி

திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அதிலும் குறிப்பாக சென்னைதான். அந்தவகையில், சென்னையில் இந்த மாநாடு நடப்பது மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. தென்னக திரைப்பட துறையானது, இந்திய சினிமாவுக்கு முன்னோடி பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்களிலும் சென்னை இன்றைக்கும் முன்னோடியாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. சென்னையை சேர்ந்த திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களின் தரத்தால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பையும், மதிப்பையும் பெற்றிருக்கிறார்கள். இதே போலத்தான் தமிழக செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றை கொண்டவையாக அமைந்திருக்கிறது.

திரைத்துறையாக இருந்தாலும், செய்தி நிறுவனங்கள், மீடியாவாக இருந்தாலும் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்க காரணம் மிக மிக நீண்ட வரலாறு நமக்கு இருப்பதால்தான். வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நிதி வளர்ச்சி என்பதாக மட்டுமல்லாமல், மனவளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியாக உயர்ந்திருக்கிறது. அத்தகைய சிந்தனை வளர்ச்சிக்கும் சேர்த்து தீனி போடுவதாக, ஊடகங்கள் வளர வேண்டும். பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமல்லாமல், சிந்தனைக்கு தீனி போடுவதாக ஊடகங்கள் தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். திரையுலகம் தன்னை அனைத்து வகையிலும் புதுப்பித்து கொள்ள வேண்டும். கதை, வசனம், இயக்கம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் இன்றைய சூழலுக்கு தகுந்தமாதிரி மாறியாக வேண்டும். அப்படி மாறினால்தான் மனிதர்களின் பொழுதுபோக்கு தளமாக திரையுலகம் தொடர்ந்து செயல்பட முடியும்.

விழிப்புணர்வு வாசகங்கள்

திரையரங்குகள், இணைய திரையரங்குகள், கணினி திரையரங்குகள், செல்போன் திரையரங்குகள் என பல்வேறு வாசல்கள் இருக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திரைப்பட விருதுகளின் மூலமாக, தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக சிறந்த படங்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அதற்காக அந்த விழாக்கள்தான் திரையுலகத்தை கலையாகவும், வர்த்தகமாகவும் மேம்படுத்த உதவும். அத்தகைய விழாக்களை நடத்துவதற்கு தமிழக அரசும் உதவிகரமாக இருக்கும்.

திரையுலகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய உலகளாவிய மையமாக திகழ தேவையான அனைத்தும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

திரைப்படங்கள் தொடங்கும்போது புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் காண்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது. இதேவேளையில், தற்போது, குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் தாக்கம் இளைஞர் சமுதாயத்தினரிடையே அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அதுகுறித்த விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அதனை மனதில் வைத்துக்கொண்டு, சமூகத்துக்கு பயனளிக்கும் முற்போக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் சுசித்ரா எல்லா, தக்‌ஷின் அமைப்பின் தலைவர் டி.ஜி.தியாகராஜன், திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமவுலி, பி.சுகுமார், நடிகர்கள் எஸ்.ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஜெயம் ரவி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கத்ரகடா பிரசாத், சி.ஐ.ஐ. அமைப்பின் தென் மண்டல இயக்குனர் ஜெயேஷ், பத்திரிகை அதிபர்கள், நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

‘எங்கள் குடும்பமும், திரையுலகமும் பிரிக்க முடியாதது’
திரைப்படங்களில் நடித்த அனுபவத்தை குறிப்பிட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த மாநாட்டுக்கு ஆர்வத்தோடு வந்திருக்கிறேன். முதல்-அமைச்சராக வந்திருந்தாலும், ஒருகாலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன். ஏன் ஒரு சில படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் திரைப்படத்தில் நடித்தவனும் நான். நாடக மேடைகளிலும், பங்கேற்று இருக்கக்கூடியவன்தான் நான். ஆகவே அந்த முறையில் கலைத்துறையோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிற காரணத்தினால், மாநாட்டில் உரிமையோடு, ஆர்வத்தோடு பங்கேற்க வந்திருக்கிறேன். எனவே என்னை முதல்-அமைச்சர் என்று பார்க்காமல், உங்களில் ஒருவனாக பார்க்கவேண்டும்.

என்னுடைய வாழ்க்கை பயணத்தைக்கூட நான் எழுதியிருக்கிறேன், ‘‘உங்களில் ஒருவன்’’ என்ற தலைப்பில், அதில் கூட நான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன். ‘‘தி.மு.க.வும், திரைத்துறையும் பிரிக்க முடியாதது. அதைப்போலவே எங்கள் குடும்பமும், திரையுலகமும் கூட பிரிக்க முடியாததுதான். அப்பா கலைஞர் முதல் என்னுடைய மகன் உதயநிதி வரை தொட்டுத்தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது இந்த கலை பாரம்பரியம்” என்று குறிப்பிட்டிருக்கிறேன். அந்த நட்புணர்வோடு தான் இங்கே நான் வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story