தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.485 கோடி உயர்மட்ட சாலை எவ்வாறு அமையும்? வரைபடம் வெளியீடு


தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.485 கோடி உயர்மட்ட சாலை எவ்வாறு அமையும்? வரைபடம் வெளியீடு
x
தினத்தந்தி 15 April 2022 8:53 PM GMT (Updated: 15 April 2022 8:53 PM GMT)

சென்னை தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை எவ்வாறு அமைக்கப்படும் என்பது குறித்து வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது இந்த துறையின் அமைச்சர் எ.வ.வேலு, ‘தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பஸ் நிலையம் இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இந்த சாலைத்திட்டம் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாசாலையையும், சென்னை மாநகரையும் பிரித்துப் பார்க்கவே இயலாது. மாநகரின் மிகப் பிரதான சாலை என்பதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிகுதியாக காணப்படும்.

போக்குவரத்துக்கு பாலமாக...

அண்ணாசாலையில் இந்திய ராணுவத்தின் தென்மண்டலத் தலைமையகம். ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி, எல்.ஐ.சி., அமெரிக்க துணை தூதரகம், மருத்துவ இயக்குனரகம் மற்றும் பல அரசு அலுவலக தலைமையகங்கள். கல்வி நிறுவனங்கள், பல்நாட்டு வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள், வங்கி தலைமையகங்கள், பல ஆஸ்பத்திரிகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும், வாகனங்கள் அணிவகுத்து மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழலையும் காணமுடிகிறது. இதிலும் குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சி.ஐ.டி. நகர் சந்திப்பு ஆகியவற்றால், காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு காத்திருப்பது அன்றாட வாடிக்கையாகியுள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகின்றது. மேலும் பேரிடர் காலத்தில் மக்களின் போக்குவரத்திற்கு பாலமாக உள்ளதும் அண்ணாசாலையே.

3.20 கி.மீ. நீளம்

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தேனாம்பேட்டையிலிருந்து-சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளை அண்ணாசாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு.

செனடப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமை வழிச்சாலை, வெங்கட்நாராயண சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு. தியாகராயநகர் உஸ்மான் சாலைகளை இணைக்கும் சி.ஐ.டி. நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை 3.20 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை ரூ.485 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story