நகைக்கடை சுவரில் துளையிட்டு 6 கிலோ வெள்ளி கொள்ளை


நகைக்கடை சுவரில் துளையிட்டு 6 கிலோ வெள்ளி கொள்ளை
x
தினத்தந்தி 18 April 2022 9:13 PM GMT (Updated: 18 April 2022 9:13 PM GMT)

தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிதம்பரநகரில் முருகன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்றபோது, அங்கு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 6 கிலோ வெள்ளி பொருட்கள், 2½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அதேநேரத்தில், லாக்கரில் இருந்த சுமார் 15 கிலோ வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக இருந்தது.

சுவரில் துளையிட்டனர்

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய சந்து பகுதியில் இருந்து கடையின் சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. அந்த வழியாக கடையில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதைத்தொடர்ந்து, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கருப்பு சட்டை, பேண்ட் மற்றும் தொப்பி அணிந்த 2 மர்ம நபர்கள், கடையின் உள்ளே புகுந்து வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் நகைக்கடையில் கொள்ளையடித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளி நகைகள், பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story