தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்


தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 18 April 2022 10:05 PM GMT (Updated: 18 April 2022 10:05 PM GMT)

‘குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’, என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற ஜூன் 19-ந் தேதி நடத்தப்படவிருக்கும், குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்றும், குறிப்பிட்ட 5 பாடங்களில் (சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல்) பட்டம் பெற்றவர்கள் மட்டும்தான், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில், அம்மொழியை புறக்கணித்து விட்டு போட்டித்தேர்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டி மற்றும் நுழைவுத்தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்பாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இத்தகைய சூழலில் ஆங்கிலத்தில் மட்டும் தான் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருப்பது சமூக அநீதி ஆகும்.

முரணான செயல்பாடு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகள் மூலம் பிற மாநிலத்தவர்கள் அரசு பணிகளில் நுழைந்து விடுவதை தடுக்க, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் நோக்கங்களை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் செயல்பட வேண்டும். தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்படுவது தவறு.

தமிழ், ஆங்கில மொழிகளில்...

இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பணியாக கருதப்படும் குடிமைப் பணிகளுக்குக் கூட, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சிறப்பாக கையாளுகின்றனர். அதனால், குறிப்பிட்ட 5 படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அநீதியாகும்.

இதை உணர்ந்து, குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித்தேர்வுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அப்பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள், வழக்கம் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிப்பதுடன், அதற்கேற்ற வகையில் கூடுதல் அவகாசத்துடன் திருத்தப்பட்ட அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story