‘தரமான கல்வியை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


‘தரமான கல்வியை வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 20 April 2022 12:17 AM GMT (Updated: 20 April 2022 12:17 AM GMT)

பள்ளி கல்வியை தரமாக வழங்குவதில் இந்திய துணை கண்டத்திலேயே தமிழகம் முன்னோடி மாநிலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை லேடி வில்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் ‘நம் பள்ளி நம் பெருமை’-பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

விழாவில் அவர், பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லதாவுக்கு சான்றிதழை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு வாகன சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான ஆல மரத்தடியின் கீழ் அமர்ந்து, கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

மகிழ்ச்சியான காலம் எது?

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பள்ளிப்பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். அத்தகைய பள்ளிப்பருவத்தில் இருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, என்னுடைய பாராட்டுகளை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இத்தகைய மகிழ்ச்சியும், மன நிறைவும், கொண்டாட்டமும் வேறு எந்த பருவத்திலும் யாருக்கும் கிடைக்காத பருவம் இந்த பருவம். இத்தகைய பள்ளிப்பருவ காலத்தை நீங்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்கு என்றால், அது உங்களது கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. கல்விக்காக இந்த அரசு மிக..., மிக..., மிக..., முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

நோக்கம், குறிக்கோள், லட்சியம்

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும். உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பெற்றோராக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும் மாணவ செல்வங்களை வளர்த்தெடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.

குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசு பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்.

குழுவின் கடமைகள் என்ன?

பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அரசு பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்த பள்ளி மேலாண்மை குழுவில் இடம் பெறுவார்கள்.

குழந்தைகளின் கற்றல் அடைவை மேம்பாடு அடையச்செய்தல், பள்ளி வளங்களை பராமரித்தல், பள்ளியின் சுற்றுப்புற சூழலை தூய்மையாக்குதல், இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மை குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும், அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும், குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலை உருவாக்க வேண்டும் இதனை செயல்படுத்துவதற்காகத் தான் இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

கல்வியில் சாதனை

20.3.2022 அன்று 37 ஆயிரத்து 558 அரசு பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களில், மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியினுடைய வரலாற்றில் இது முக்கியமான மைல்கல் ஆக அமைந்திருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒருசேர இதுபோல் பங்கேற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை என்பது ஒரு நிகழ்ச்சியின் சாதனையாக மட்டும் அல்ல, வரலாற்று சாதனையாக, கல்விச் சாதனையாக இது மாற வேண்டும்.

37 ஆயிரத்து 558 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிகளின் பெருமையை மீட்டெடுத்து, நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தமிழ்நாடு அரசு முன்னெடுக்கக்கூடிய இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வாருங்கள் என்று உங்களை எல்லாம் மிகுந்த பணிவோடு, உரிமையோடு விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்தி பள்ளிகளை வளப்படுத்துவோம். நம் பள்ளி நம் பெருமை என ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள்-மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story