தமிழக பேரவையில் சித்த மருத்துவ பல்கலை. மசோதா நிறைவேறியது


தமிழக பேரவையில் சித்த மருத்துவ பல்கலை. மசோதா நிறைவேறியது
x

சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

சென்னை,

தமிழகத்தில்  பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைகழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார். சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதற்கான சட்ட முன்வடிவு நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னர் தற்போது இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக  முதல்-அமைச்சரே இருப்பார் என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என அனைத்திற்கும் முதல்-அமைச்சரே தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Next Story