போதையில் கீழே விழுந்தபோது இடுப்பில் சொருகிய மதுபாட்டில் குத்தி தொழிலாளி சாவு


போதையில் கீழே விழுந்தபோது இடுப்பில் சொருகிய மதுபாட்டில் குத்தி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 1 May 2022 9:06 PM GMT (Updated: 1 May 2022 9:06 PM GMT)

போதையில் கீழே விழுந்தபோது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள தெற்றிவிளையைச் சேர்ந்தவர் ஜான் ஜெயக்குமார் (வயது 40), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

ஜான்ஜெயக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலை முடிந்தபிறகு தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஜான் ஜெயக்குமார் இரவில் மதுகுடித்து விட்டு போதையில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் குடித்தது போக மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் இடுப்பில் சொருகி வைத்தபடி நடந்து வந்தார்.

மதுபாட்டில் குத்தி சாவு

வீட்டின் அருகில் வந்தபோது அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து ஜான் ஜெயக்குமாரின் வயிற்றில் குத்தி கிழித்தது. இதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார்.

உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜான் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story