மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்வுதள வசதியுடன் பஸ்களை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்


மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்வுதள வசதியுடன் பஸ்களை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 May 2022 10:27 PM GMT (Updated: 2 May 2022 10:27 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்வகையில் தாழ்வுதள வசதியுடன்கூடிய பஸ்களை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில், பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும்வகையில் பஸ்கள் கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பஸ்களை அரசு கொள்முதல் செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

தாழ்வுதள வசதி

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை செயலாளர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பஸ்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக்குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பஸ்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்வகையில் தாழ்வுதள வசதி கொண்டவை. அதாவது, மொத்த கொள்முதல் பஸ்களில் இந்த எண்ணிக்கை 37 சதவீதம் ஆகும். தொழில்நுட்பக்குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பஸ் நிறுத்தங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்வகையிலான பஸ்கள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் 6 மாதங்களில் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிதிநெருக்கடி உள்ளபோதும், இந்த பஸ்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஐகோர்ட்டு ஏற்கனவே பஸ் கொள்முதலுக்கு தடை விதித்துள்ளால், இந்த டெண்டர் நடவடிக்கைகளை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு உள்ளது.

Next Story