வேலூர்: செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி


வேலூர்: செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 4 May 2022 3:20 AM GMT (Updated: 4 May 2022 3:20 AM GMT)

குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே கானா ஆல்பம் எடுக்க தண்டவாளம் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்: 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் கானா பாடல்களை தானே எழுதி செல்போனில் படக்காட்சி மூலம் படமெடுத்து யூடியூபில் பரப்பி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் கானா பாடல் ஆல்பம் எடுக்க சென்று அங்குள்ள தண்டவாள பகுதியில் ‘செல்பி’ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை பிடித்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரெயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசந்தகுமார் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் நேற்று மாலை ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story