தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 5 May 2022 3:05 AM GMT (Updated: 5 May 2022 4:14 AM GMT)

தேர்வு அறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமா? அல்லது அணியாமல் இருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வின் போது தேர்வு அறையில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை எனவும், எனவே தேர்வு அறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story