இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் நிதி


இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் நிதி
x
தினத்தந்தி 5 May 2022 9:01 PM GMT (Updated: 5 May 2022 9:01 PM GMT)

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வைகோ வழங்கினார்.

சென்னை,

ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படை தேவைப்பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று, ம.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களுடைய ஒரு மாத ஊதியமான தலா 2 லட்சம், 3 எம்.எல்.ஏ.க்கள் தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம், ஒருவர் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் வரைவோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார். அப்போது அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு, ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன், தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story