பரபரப்பான ரோட்டில் காரை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ


பரபரப்பான ரோட்டில் காரை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் - அதிர்ச்சி வீடியோ
x
தினத்தந்தி 8 May 2022 6:05 AM GMT (Updated: 8 May 2022 6:05 AM GMT)

பரபரப்பான ரோட்டில் காரை வழிமறித்து கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சுபாஷ் நகரில் உள்ள பரபரப்பான சாலையில் நேற்று இரவு ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் கோஷொபூர் மண்டி முன்னாள் சேர்மன் அஜய் சவுத்ரி மற்றும் அவரது சகோதரன் ஜசா சவுதிரி பயணித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சந்தை பகுதியில் சென்றபோது அந்த காரை பைக்கில் வந்த ஒரு கும்பல் திடீரென இடைமறித்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த அஜய் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய 3 பேர் காரை நோக்கி மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். 10 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காரில் இருந்த சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றுவிட்டது. படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, காரை இடைமறித்து கும்பல் துப்பாக்கிச்சூடு நடந்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Next Story