திருச்சி: நள்ளிரவில் 100 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு..!


திருச்சி: நள்ளிரவில் 100 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு..!
x
தினத்தந்தி 8 May 2022 12:24 PM GMT (Updated: 8 May 2022 12:24 PM GMT)

திருச்சியில் இருந்து மணப்பாறை வரை சைக்கிளில் சென்று ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

திருச்சி:

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் அவ்வப்போது சைக்கிளில் பயணம் மேற்கொண்டு போலீஸ் நிலைங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து சாதாரண உடையில் திடீரென சைக்கிள் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோந்து பணி மேற்கொண்டார்.

அதிகாலை 4.30 மணி வரை சுமார் 6 மணி நேரம் மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட போலீஸ் நிலைங்களுக்கு சைக்கிளிலேயே சென்று அவர் ஆய்வு செய்தார். மேலும் இரவு ரோந்து வாகன போலீசார் மற்றும் பீட் அதிகாரிகள், போலீசார் எவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்? என்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது, குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வோடு பணியை மேற்கொள்ள அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார். மேலும் சாலை விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அத்துடன் பொதுமக்களிடமும், இரவு காவலாளிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுமார் 100 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்த அவர், உடற்பயிற்சி குறித்தும், உடற்பயிற்சி மூலம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும், போலீசார் அனைவரும் கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.


Next Story