இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி: முதல்-அமைச்சர் அறிவிப்பு


இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 11:56 PM GMT (Updated: 10 May 2022 11:56 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாளைக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என்றும், இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உயர்நீதிமன்ற காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். சென்னை மாநகரத்தில் துறைமுகம் காவல் நிலையத்திற்கு புதிய காவல்நிலைய கட்டிடம் ரூ.4.88 கோடியில் கட்டப்படும்.

பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் 25 குதிரை லாயங்கள் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும். காவலர் குடியிருப்புகளில் ஏற்பட்ட பழுதுபார்ப்பு பணிகளுக்காக சிறப்பு நிதி ரூ.20 கோடி நடப்பாண்டில் வழங்கப்படும்.

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும் இருவாரங்களுக்கு ஒரு முறை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். மாணவர்கள் மற்றும் காவலர்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், சமுதாயத்தில் மாணவர்களை செம்மைப்படுத்தும் வகையில் மாணவர் காவல் படை திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

1,507 காவல் நிலையங்களுக்கு கணினிகள்

மாநிலத்தில் உள்ள 1,507 அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கணினிகள் மற்றும் துணைக்கருவிகள் ரூ.23 கோடி செலவில் வாங்கப்படும். பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக கையடக்க கணினிகள் ரூ.4.70 கோடி செலவில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாங்கப்படும். முதன்மை கட்டுப்பாட்டு அறைக்கான மொபைல் சாதனங்களை மாற்றுவதற்கு ரூ.2.01 கோடி நிதி வழங்கப்படும்.

ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளின் ஆண்டு செயல் திறன் அறிக்கைகளை பதிவு செய்வதற்கான ஸ்பேரோ மென்பொருள் ரூ.2.45 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும். தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவிற்கு வன்பொருள் வாங்க ரூ.60 லட்சம் செலவிடப்படும்.

கூகுள் நிலப்படம்

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க கூகுள் நிலப்படம் மூலம் தானியங்கி எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்படும். இதற்கான செலவினம் ரூ.1 கோடி ஆகும். புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு புதிய தடய அறிவியல் ஆய்வகங்கள் ரூ.1.07 கோடி செலவில் உருவாக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் தொடர்பான வழக்குகள் சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களை ஆய்வு செய்ய பிரத்யேக அலகு ஒன்று சென்னை தலைமை ஆய்வகத்தில் ரூ.3.71 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சென்னை தலைமை ஆய்வகத்தின் ஆய்வுத் திறனை வலுப்படுத்த அதிநவீன ஆய்வு கருவி ஒன்று ரூ.2.50 கோடி செலவில் வாங்கப்படும்.

காவல்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர்ப்படி உயர்த்தி வழங்கப்பட்டதை போன்று நிலைய அலுவலர் மற்றும் அதன் கீழ்பணி நிலையிலுள்ள தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடர்பாட்டுப்படி ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், உதவி மாவட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் நிலையில் உள்ள பணியாளர்களுக்கு ரூ.900-ல் இருந்து ரூ.1,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.83 கோடி ஆகும்.

மிகைப்பணி ஊதியம் உயர்வு

தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.200 மிகைப்பணி ஊதியம் ரூ.500 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.1.01 கோடி ஆகும். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தலைமையகத்தில் நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

மாவட்ட தலைமையகத்தில் உள்ள நிலைய அலுவலர் பதவிகள் உதவி மாவட்ட அலுவலர் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.18 லட்சம் ஆகும். கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தினை இரண்டாக பிரித்து சேலத்தினை தலைமையகமாக கொண்டு புதிய மண்டலம் ஒன்று உருவாக்கப்படும்.

மாநில பயிற்சி கழகம்

செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் முதற்கட்டமாக ரூ.19.30 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாநில பயிற்சி கழகம் ஒன்று புதிதாக நிறுவப்படும். சென்னை பெரும்பாக்கத்தில் 40 பணியாளர் குடியிருப்புகள் ரூ.15.20 கோடி செலவில் கட்டப்படும்.

சென்னை புறநகர் மாவட்டம் கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கம் உள்பட 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் ரூ.11 கோடி செலவில் நிறுவப்படும்.

நவீன தீயணைப்பு மீட்பு ஊர்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் ரூ.4.35 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

கட்டிட பராமரிப்பு பணிகளுக்காக தற்போது வருடந்தோறும் ஒதுக்கப்படும் ரூ.1.04 கோடியுடன் சேர்த்து மேலும் ரூ.1 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.37.50 கோடி செலவில் 50 புதிய நீர்தாங்கி வண்டிகள், ரூ.16 கோடி செலவில் 20 பெரும் தண்ணீர் லாரிகள், ரூ.80 லட்சம் செலவில் சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய சிறிய வகை நுரை தகர்வு நீர் தாங்கி வண்டி, ரூ.3 கோடி செலவில் 500 தீப்பாதுகாப்பு கவச உடைகள், ரூ.2 கோடி செலவில் 200 மூச்சுக்கருவிகள், ரூ.60 கோடி செலவில் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, துரைப்பாக்கம் ஆகிய 3 இடங்களுக்கு 70 மீட்டர் உயரம் செல்லக்கூடிய வான் நோக்கி உயரம் நகரும் ஏணியுடன் கூடிய நவீன தீயணைப்பு மீட்பு ஊர்தி வழங்கப்படும். தீ ஆணையம் ஒன்று புதியதாக அமைக்கப்படும்.

ரூ.300 சிறப்புப்படி

இரவு பணிக்கு செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்புப் படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும்.

ஏற்கனவே, காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதனால் 10,508 பேர் பயனடைவார்கள்.

சிறப்பு புலனாய்வு குழு

இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு பலரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story