இந்திய ஹாக்கி அணி: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இந்திய ஹாக்கி அணி: தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 11 May 2022 7:18 AM GMT (Updated: 11 May 2022 7:18 AM GMT)

இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த கார்த்தி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேலும் தான் அந்த இரண்டு வீரர்கள்.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Next Story