இலங்கை மக்களுக்கு சபாநாயகர் அப்பாவு நிதியுதவி..!


இலங்கை மக்களுக்கு சபாநாயகர் அப்பாவு நிதியுதவி..!
x
தினத்தந்தி 11 May 2022 9:05 AM GMT (Updated: 11 May 2022 9:05 AM GMT)

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சபாநாயகர் அப்பாவு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார்.

சென்னை,

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் படகுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கையில் நிலவி வரும் சூழலால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

தொடர்ந்து இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வந்தவண்ணம் உள்ளது. 

இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சபாநாயகர் அப்பாவு, தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை வழங்கினார்.

Next Story