ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்


ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 11 May 2022 7:52 PM GMT (Updated: 11 May 2022 7:52 PM GMT)

தஞ்சையில் ஆடிட்டரை 4 பேர் கும்பல் சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவருடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை உள்ளது. அங்கு ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை இவர் வளர்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பண்ணையில் இருந்த மகேஸ்வரனை 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதை அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக தஞ்சையை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்தி(32), மணிகண்டன்(29), குமரேசன்(27), அரவிந்த்(26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளாக கார்த்தி ஏலம் எடுத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின்போது குளியல் மற்றும் கழிவறை கட்டிடத்தை மகேஸ்வரன் ஏலம் எடுத்தார். இது தொடர்பாக மகேஸ்வரன், கார்த்தி இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கார்த்தியின் தாய் ருக்மணி அ.தி.மு.க. வார்டு பிரதிநிதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story