ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதாவை திரும்ப பெற வேண்டும்


ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதாவை திரும்ப பெற வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2022 6:55 PM GMT (Updated: 12 May 2022 6:55 PM GMT)

சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை இயற்றிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வகையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது எனத் தேர்தலில் வாக்களித்த தி.மு.க., கொரோனாவின் தாக்கம் முடிவடையாத நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யும் சட்ட மசோதாவை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு அறிமுக நிலையிலும், பரிசீலனை நிலையிலும் அ.தி.மு.க. எதிர்ப்புத் தெரிவித்திருந்தும், அதனைப் புறந்தள்ளிவிட்டு மேற்படி சட்ட மசோதா இயற்றப்பட்டதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டணத்தை உயர்த்த கூடும்

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்தாலும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த தி.மு.க., இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன் இருக்கின்ற சலுகைகளை, திட்டங்களை முடக்குகின்ற அரசாக இருக்கிறது. ‘பட்ட காலிலே படும்’ என்ற பழமொழிக்கேற்ப சோதனை மேல் சோதனைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.

ஏற்கனவே ஆண்டுக்கு ஒருமுறை வாடகை உயர்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தி.மு.க.வின் ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்வு அறிவிப்பின்மூலம் நகர்ப் புறங்களில் மேலும் வாடகை உயரும் சூழல் உருவாகும். இது மட்டுமல்லாமல், வணிக நோக்கத்தோடு கடைகள் மற்றும் நிறுவனங்களை வைத்திருப்பவர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தக்கூடும்.

திரும்ப பெற வேண்டும்

இன்னும் என்னென்ன கட்டணங்களை இந்த அரசு உயர்த்தப் போகிறதோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள். எனவே, மக்கள் நலன் என்று அடிக்கடி பேசும் முதல்-அமைச்சர், உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்ட மசோதாவை திரும்பப் பெற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story