காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது


காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது
x
தினத்தந்தி 12 May 2022 11:23 PM GMT (Updated: 12 May 2022 11:23 PM GMT)

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நேற்று சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரி டெல்டா

தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா என்பது இப்போது மட்டுமல்ல; நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பகுதியாக விளங்கிக்கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழுப்பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

காவிரி நதியின் மூலம் பாசனம் கிடைக்கப்பெறுவதால், இப்பகுதிகளில் நெல் ஒரு முக்கியமான பயிராக கிட்டத்தட்ட 14 லட்சம் ஏக்கர் பரப்பிலே சாகுபடி செய்யப்பட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் அரிசி உற்பத்தியினை இந்த காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது.

வேளாண் மண்டலம்

தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயறு வகைகள், எள், பருத்தி போன்ற பயிர்களும், டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இந்த பகுதியே மிகப்பெரிய வேளாண் மண்டலமாகக் காணப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வாழும் விவசாயிகள், வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் விளைநிலங்களை பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதல்-அமைச்சரைத் தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மைக்கு தனி பட்ஜெட்

வேளாண்மைக்கு நம்முடைய அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த கூட்டம் அமைந்திருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கருத்துகளை பெற்று வேளாண்மைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்த அரசுதான் நம்முடைய தி.மு.க. அரசு.

சென்ற ஆண்டில் மேட்டூர் அணையினை குறித்த காலத்திலே, அதாவது ஜூன் 12-ந்தேதியே திறந்து, ரூ.61 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை நம்முடைய அரசு செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.

வரலாற்று சாதனை

மேட்டூர் அணையினைத் திறப்பதற்கு முன்பாகவே, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் ரூ.65 கோடியே 11 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிட்டது நம்முடைய அரசு. அதன் விளைவாக, கடந்த 2021-ம் ஆண்டின் குறுவை நெல் சாகுபடி பரப்பு 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரைக் கடந்து, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையினை நாம் ஏற்படுத்தினோம். இது நம்முடைய ஓராண்டு சாதனையில், மிக முக்கியமான, பெருமைக்குரிய சாதனையாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து நடப்பாண்டிலும், தூர்வாரக்கூடிய பணிகள் ரூ.80 கோடி நிதி ஒதுக்கீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம்

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம் ஆகியவற்றையும் நாம் அறிவித்திருக்கிறோம்.

காவிரி டெல்டாவில் ரூ.30 கோடியே 50 லட்சத்தில் திருவாரூரில் சேமிப்புக் கிடங்குகள், உலர் களங்கள்; காட்டுமன்னார் கோவில், பேராவூரணி பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள்; திருவாரூர் பகுதியில் உணவு பூங்கா, ரூ.14 கோடியே 50 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டம்; நாகப்பட்டினம் கீழ்வேளூரில் புதிய வேளாண்மைக் கல்லூரி; கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம்;

விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள்

வேளாண் விளைபொருட்கள் அதிக வரத்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகில் சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய விற்பனை நிலையங்கள்; தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கி, அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில், திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையே இருக்கக்கூடிய பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை செய்யப்பட்டது என பல்வேறு திட்டங்களை விவசாயிகள் நலன் காக்க கடந்த ஓராண்டில் அறிவித்து, அவற்றையெல்லாம் நாம் செயல்படுத்தி வருகிறோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்பதையும் இந்த கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதிக வேலைவாய்ப்பு

வேளாண்மை தொழிலை நம்பியிருக்கக்கூடிய விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலின் நலனை பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும்.

பாசன நீரை பொறுத்தமட்டில், கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பயிர் வகைகளையும், புதிய மாற்று தொழில்நுட்பங்களையும் உடனுக்குடன் ஏற்று நடைமுறைப்படுத்தி நல்ல விளைச்சலை அடைய வேண்டும்.

மாற்று பயிர் சாகுபடி

வேளாண் தொழிலில் வருமானம் பெருக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் குறுவை மற்றும் கோடைப் பருவத்தில் குறைந்த நீர்த் தேவையுள்ள மாற்று பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, மதிப்புக்கூட்டுதல் போன்ற ஆலோசனைகளை உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும்.

இத்தகைய பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் துணை நிற்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் உள்ள எல்லா பிரிவுகளும், செயல்பாட்டிற்கு வரும் வகையில், விவசாயிகளும், விவசாயச் சங்க பிரதிநிதிகளும் நல்ல முறையிலே கருத்து பரிமாற்றங்கள் செய்து, காவிரி டெல்டா பகுதிக்கென நீண்ட காலத்திட்டம் ஒன்றை வகுக்க உங்களது உயரிய பங்களிப்பையும், கருத்துகளையும், ஆலோசனைகளையும் இந்த கூட்டத்திலே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

வளமான தமிழகம் அமைக்க வேளாண்மையை காக்க வேண்டும். தமிழ்நாட்டில், டெல்டா மாவட்டங்கள் வேளாண்மையின் மிக முக்கியமான அங்கம் என்கிற காரணத்தால், அதனை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story