மாணவ-மாணவிகளுக்கு 6 லட்சம் இலவச சைக்கிள்கள் - தமிழக அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 6:59 PM GMT (Updated: 15 May 2022 6:59 PM GMT)

3 மாதங்களுக்குள் மாணவ-மாணவிகளுக்கு 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

2021-22-ம் கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் இந்த மாணவ-மாணவிகளுக்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஒப்பந்தத்தில் தகுதியான சைக்கிள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்து 3 மாத காலத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story