திண்டுக்கல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு...!


திண்டுக்கல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு...!
x
தினத்தந்தி 16 May 2022 6:27 AM GMT (Updated: 16 May 2022 6:27 AM GMT)

திண்டுக்கல் அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 பேர் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது ஜி.நடுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 2 தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர் உளியப்பகவுடர். இவருக்கு 5 திருணமங்கள் நடந்தது. 4 மனைவிகளுக்கு 9 மகன்கள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி ஒரு கிராமத்தையே உருவாக்கினர். இவர்கள் வசித்த பகுதி நாட்டாமைகாரத்தெரு என்று அழைக்கப்பட்டது.

4 மகன்களும் பொருளாதார தேவைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்தபோதும் குலதெய்வ வழிபாட்டுக்காக ஒன்று சேர்வது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளிநாட்டில் இருந்தவர்கள் வர முடியவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குலதெய்வ கோவிலில் ஒன்றுகூட முடிவு செய்தனர்.

நடுப்பட்டியை சேர்ந்த கருணாகரன், முத்துராமன், புதுமைராஜன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து அவர்கள் அனைவரையும் ஊருக்கு வரவழைத்தனர். உளியப்பகவுடரின் 4 மகன்கள், அவர்களது குழந்தைகள் என மொத்தம் 75 பேர் குலதெய்வ கோவிலில் ஒன்றுகூடி வழிபட்டனர்.

3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஒன்றுகூடி தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த முன்னோர்கள் இல்லாத சூழ்நிலையிலும் குலதெய்வ கோவிலில் ஒன்று சேர்ந்து வழிபட்டது மனதிற்கு திருப்தியை அளித்தது என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story