‘‘பீகார் நோக்கி செல்கிறோம், போலீசார் எங்களை எதுவும் செய்ய முடியாது’’ - வீடியோ வெளியிட்ட வடமாநில கொள்ளையன்...!


‘‘பீகார் நோக்கி செல்கிறோம், போலீசார் எங்களை எதுவும் செய்ய முடியாது’’ - வீடியோ வெளியிட்ட வடமாநில கொள்ளையன்...!
x
தினத்தந்தி 18 May 2022 3:31 AM GMT (Updated: 18 May 2022 3:31 AM GMT)

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருடிய வடமாநில வாலிபர்கள் அதன் உரிமையாளருக்கு வீடியோ ஒன்று அனுப்பி உள்ளனர்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் கோபி என்பவர் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகிய 2 வாலிபர்கள் கடந்த மாதம் 27-ந் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

 அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்திலேயே தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். ஆதார் அட்டை, புகைப்படம் கொடுக்க வேண்டும் என கோபி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஆதார் அட்டை, புகைப்படம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். 

எதுவும் செய்ய முடியாது

இந்த நிலையில் மஞ்சித், நிர்மல் ஆகிய இருவரும் கடந்த 15-ந் தேதி காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த மினி வேன், மற்றும் இதர வாகனங்களில் இருந்த 50 லிட்டர் டீசல், பணம் சுமார் ரூ.2 லட்சம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு சாமான்கள், ஒரு சிலிண்டர், எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசில்புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொருட்களை திருடிச்சென்ற வடமாநில வாலிபர்கள் நிர்மல் மற்றும் மஞ்சித் ஆகியோர் தாங்கள் பேசிய ஒரு வீடியோ பதிவை, குடிநீர் நிறுவன உரிமையாளர் கோபிக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளனர். 

திருடிய வாலிபர்கள் 

மினி வேனில் சென்றபடியே மஞ்சித் பேச, அதை நிர்மல் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவில் நாங்கள் பீகாரை நோக்கி செல்கிறோம். எங்களை போலீசார் எதுவும் செய்ய முடியாது என்று கூறி உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார். திருடிய வாலிபர்கள் வீடியோ அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story