சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள 6½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகீம் (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி (30) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. மேலும் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 2 பேரும் தங்கள் ஆடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுபாப்பு படை போலீசார் மோப்ப நாயுடன் வந்து அந்த பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தனர்.

அந்த பார்சலில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 520 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர்கள், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து கழிவறைக்குள் அதனை மறைத்து வைத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 6½ கிலோ தங்கம் மற்றும் லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story