இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரம் பேர் குவிந்தனர்


இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரம் பேர் குவிந்தனர்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரம் பேர் குவிந்தனர் போலீஸ் பாதுகாப்புடன் பதிவு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளம்அறிவியல் மற்றும் பி.ஏ., பி.காம். உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 2 ஆயிரம் இடங்களுக்கு சுமார் 17 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே எஞ்சியுள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் தங்களின் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டுமென கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று பி.எஸ்சி., இளம்அறிவியல் பாடப்பிரிவுக்காக பதிவு செய்வதற்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள், அரசு கல்லூரி முன்பு குவிந்தனர். எஞ்சியுள்ள சுமார் 300 இடங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் குவிந்ததால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அதோடு அங்குள்ள கல்லூரி சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு விழுப்புரம் நகர போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், மாணவ- மாணவிகள் கல்லூரியின் உள்ளே அனுமதிக்கப்பட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம். உள்ளிட்ட பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண் தகுதியின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story