33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,607 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 12-14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15-18 வயதுடையவர்கள் செலுத்திய சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இவ்வயதுடையவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அரசு நிலையங்களிலேயே 75-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை 75 நாட்களுக்கு இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 2-ம் தவணை செலுத்திய தேதியிலிருந்து 9 மாத கால அவகாசத்தில் இருந்து தற்போது 6 மாத கால அவகாசமாக குறைக்கப்பட்டுள்ளதால் இவர்களும் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இதேபோல் கரூர் மாவட்டத்தில் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி இன்னும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மொத்தம் 64,509 பேர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவர்கள் 5,41,952 பேர் உள்ளனர். இவர்களும் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.