கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு


கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு
x

அறந்தாங்கியில் கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 35 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கிராம நிர்வாக உதவியாளர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் தட்சர் தெருவை சேர்ந்தவர் மலைக்கண்ணன் (வயது 41). இவர் ஆலங்குடி வட்டாரத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார்.நேற்று காலை வழக்கம்போல் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து மலைக்கண்ணன் மனைவி மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்து உள்ளது.

35 பவுன் நகைகள் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story