தங்க புதையல் கிடைத்ததாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது


தங்க புதையல் கிடைத்ததாக மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x

திருவண்ணாமலையில் தங்க புதையல் கிடைத்ததாக மோசடியில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தங்க புதையல் கிடைத்ததாக மோசடியில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிளாஸ்டிக் பூ வியாபாரம்

திருவண்ணாமலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் காலி இடங்களில் கூடாரம் அமைந்து பிளாஸ்டிக் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களுக்கும் சென்று இந்த பிளாஸ்டிக் பூக்களை மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த நபர்களை சேர்ந்த மைசூர் மாண்டியா பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.ராகுல் (வயது 24), சோயங்கி பவன் (22), அவரது தம்பி சோயங்கி ராகுல் (20), பிரபு (34) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டராம்பட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பூங்காவனம் என்பவரின் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள் தங்களுக்கு கூடாரம் அமைக்கும் போது தங்க புதையலாக குண்டு மணி மாலைகள் கிடைத்தது உள்ளது. சொந்த ஊருக்கு விரைவில் செல்ல உள்ளதால் நல்ல விலைக்கு விற்றுவிட்டு சென்று விடலாம் என்று பூங்காவனத்திடம் அவர்கள் தொிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் வைத்து இருந்த ஒரு மாலையில் இருந்து 2 குண்டு மணிகளை பூங்காவனம் கண் எதிரிலேயே பிய்த்து அவரிடம் வழங்கி உள்ளனர். அந்த 2 குண்டு மணிகளை அவர் சோதித்து பார்த்ததில் அது தங்கமாக இருந்து உள்ளது. இதையடுத்து பூங்காவனம் அவர்களிடம் உள்ள குண்டு மணி மாலைகளுக்கு விலை பேசியுள்ளார். பேரம் பேசப்பட்டு ரூ.2 லட்சத்தில் முடிந்தது.

கவரிங் குண்டு மணி மாலைகள்

இதையடுத்து அவர்கள் ரூ.2 லட்சத்துடன் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு குண்டு மணி மாலைகளை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்து உள்ளனர்.

இதனை நம்பி பூங்காவனம் கடந்த 28-ந்தேதி ரூ.2 லட்சத்தை எடுத்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர்கள் 4 பேரும் பணத்தை பெற்று கொண்டு மாலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். மாலை பெற்றுக்கொண்ட அவர் அவற்றை சோதனை செய்து பார்த்ததில் அந்த மாலைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் பஸ் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மற்றொரு நபரை ஏமாற்ற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றும் கும்பல் என்று தெரிவித்து உள்ளனர்.

4 பேர் கைது

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரின் ஆலோசனையின் படி அந்த நபர் அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். அவர்கள் 4 பேரும் கவரிங் குண்டு மணி மாலைகளை எடுத்து கொண்டு பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஆர்.ஜே.ராகுல், சோயங்கி பவன், சோயங்கி ராகுல், பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கவரிங் குண்டு மணி மாலைகள் மற்றும் ரூ.52 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story